சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கலா?


சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கலா?
x

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர், டான்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து வந்த 'பிரின்ஸ்' படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த படத்தில் வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும், சிவகார்த்திகேயன் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கொடுத்ததாகவும் தகவல் பரவியது.

தற்போது மடோனா அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற தீவிரம் சிவகார்த்திகேயனிடம் இருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை எடுத்த 'மாவீரன்' காட்சிகளை போட்டு பார்த்தபோது சிவகார்த்திகேயனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், எனவே கதையில் மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு டைரக்டர் மறுப்பு சொன்னதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "மாவீரன் படம் தொடர்பாக ஆதாரமற்ற வதந்திகள் வருகின்றன, பொய்யான தகவல்களும் தொடர்ந்து பரவுகின்றன. அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். 'மாவீரன்' படக்குழு மறக்க முடியாத படத்தை கொடுக்க தொடர்ந்து உழைத்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story