பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலித்த வியப்பில் விக்ரம்


பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலித்த வியப்பில் விக்ரம்
x

பொன்னியின் செல்வன் படம் ரூ.500 கோடி வசூலித்து இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த வசூலை பார்த்து ஆச்சரியப்பட்ட விக்ரம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வியந்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீசான நாளில் இருந்தே வசூலில் சாதனை நிகழ்த்தி வந்தது. தற்போது பொன்னியின் செல்வன் வெளியாகி 50 நாட்கள் ஆன நிலையில் வசூல் விவரத்தை பட தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. அதாவது இதுவரை பொன்னியின் செல்வன் படம் ரூ.500 கோடி வசூலித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த வசூலை பார்த்து ஆச்சரியப்பட்ட விக்ரம், "என்னை யாராவது கிள்ளுங்கள். இது கனவு இல்லையே'' என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வியந்துள்ளார். பொன்னியின் செல்வனில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படமும் நல்ல வசூல் குவிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.


Next Story