கிளாமர் வேடங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? - நடிகை ஷில்பா மஞ்சுநாத் பதில்


கிளாமர் வேடங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? - நடிகை ஷில்பா மஞ்சுநாத் பதில்
x

காதல் கதை ரொம்ப பிடிக்கும் என்று நடிகை ஷில்பா மஞ்சுநாத் கூறினார்.

`எமன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஷில்பா மஞ்சுநாத். `காளி' படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர், அடுத்து வெளியான `இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தில் நவநாகரிகப் பெண்ணாக நடித்து இளசுகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். அந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.

அந்த சமயம் `காதல் தேவதை' என்று வாலிபர்களால் வர்ணிக்கப்பட்ட ஷில்பா மஞ்சுநாத், கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `சிங்கப்பெண்ணே' படத்தில் அவரது நடிப்பு ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஷில்பா மஞ்சுநாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என் வீட்டை பொறுத்தவரையில், நாங்கள் குடும்பத்துடன் சினிமா பார்த்ததே கிடையாது. சினிமாவை பெரிதும் விரும்பாத குடும்பம். எனவே நானும் சினிமா மீது ஆர்வமில்லாமல் தான் இருந்தேன். ஒரு விபத்து மாதிரி வந்தது தான் சினிமா வாய்ப்பு.

கல்லூரி முடித்தபிறகு திடீரென்று நண்பர்கள் மூலமாக `மிஸ் கர்நாடகா' அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. `போய்தான் பார்ப்போமே...' என்று சென்றேன். பட்டத்தை வென்றேன் (2014-ம் ஆண்டு). அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் வந்தது. `சரி நடித்து தான் பார்ப்போமே' என்று இறங்கினேன். பிடித்துப் போனது. வாழ்ந்து வருகிறேன்.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் பெரிய பெண் தொழில் அதிபராக இருந்திருப்பேன். இப்போது கூட, சினிமா தாண்டி நான் ஒரு கட்டுமான தொழிலை மேற்கொண்டு வருகிறேன். கேமராவுக்குக் பின்னால் நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது எனக்குத் தெரியாது.

எனக்கு காதல் கதை ரொம்ப பிடிக்கும். எனவே இன்னும் அட்டகாசமான காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். சினிமா தாண்டி சமூக சேவைகளில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். அதையெல்லாம் வெளியே சொல்ல விரும்பவில்லை. நான் மிகவும் சாப்டான ஆளு. ஆனால் ரக்கடான ஆளுனு எல்லோரும் சொல்கிறார்கள்.

கிளாமர் வேடங்களில் நடிப்பது மாதிரியான கதைகள் தொடர்ந்து அமையவேண்டும். கவர்ச்சி என்பது கதைக்கு செட்டாக அமைந்தால் நல்லது. கட்டாயப்படுத்தி அமையக்கூடாது. அதுதான் என் பாலிசி. கொரோனா காலத்துக்கு பிறகு ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை வந்தது. நிறைய விஷயங்களை புரிந்துகொண்டேன். தகுதி இருந்தால் நடிகைகளும் அரசியல் செய்யலாம். பல கஷ்டங்களை தாண்டி வந்து இப்போது தான் நடிப்பில் ஒரு பெயரை வாங்கிக்கொண்டு இருக்கிறேன். இப்போ போய் திருமணமா? என்று ஷில்பா மஞ்சுநாத் கூறினார்.


Next Story