பார்பி கவுரவித்த மருத்துவர் கிர்பி ஒயிட்


பார்பி கவுரவித்த மருத்துவர் கிர்பி ஒயிட்
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 10:57 AM GMT)

மாகாணம் முழுவதும் நிலவி வந்த பி.பி.இ உடை பற்றாக்குறையினைப் போக்குவதற்கு, ‘கவுன் ஃபார் டாக்டர்ஸ்' என்ற பெயரில் கிரவுட்ஃபண்டிங் மூலம் ரூ.30 லட்சம் நிதி திரட்டி, பி.பி.இ ஆடைகளைத் தயாரித்தார். பாதுகாப்பு உடைகளைத் தைத்து அவற்றை மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார்.

கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து உலகம் மெல்ல மீண்டுவந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு அளப்பரியது. 
உலகெங்கும் உள்ள எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு, பகல் பாராது உழைத்து நிலைமையைச் சரி செய்தனர். 

அவர்களது நற்சேவைக்கு நன்றி செலுத்தும் விதமாக உலகின் புகழ்பெற்ற பார்பி பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான மெட்டல் இன்க் நிறுவனம், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என 6 பேரைத் தேர்வு செய்து, அவர்களது, உருவத்தில் பார்பி பொம்மைகளைத் தயாரித்து கவுரவித்துள்ளது. அதில் ஒருவர் தான் மருத்துவர் கிர்பி ஒயிட்.

கொரோனாவின் தாக்குதலில் உலகம் மிரண்டு போயிருந்தபோது, பி.பி.இ உடை தட்டுப்பாட்டால் மருத்துவ உலகம் தவித்தது. அப்போது களத்தில் இறங்கி பாதுகாப்பு உடைகளை மருத்துவமனை வளாகத்திலேயே தயாரித்தார் கிர்பி.  

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள சார்ல்டன் எனும் சிறிய நகரத்தில் வளர்ந்தவர் மருத்துவர் கிர்பி ஒயிட். அவரது அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அப்பா ரெயில்வே துறை ஊழியர். பள்ளிப்பருவத்தில் கிர்பியின் வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே உடன் படித்துள்ளனர். 

அதில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்த ஒரே மாணவி கிர்பிதான். எளிய பின்னணியில் இருந்து வந்த அவருக்குக் கிடைக்கும் இன்றைய அங்கீகாரங்கள் அவர் எதிர்பாராதவை.

கொரோனாத் தொற்று பரவத் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில், மருத்துவ உலகம் என்ன செய்வது என அறியாது திக்குமுக்காடிப் போனது. அதிலும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பு உடை பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது பெரும் சவாலாக இருந்தது. 

விக்டோரியா மாகாணத்தின் பென்டிகோ எனும் சிறு நகரத்தில் பொதுநல மருத்துவராகப் பணிபுரிந்த கிர்பியும், அதே இக்கட்டான நிலையை எதிர்கொண்டார். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலில், பி.பி.இ கிட்களுக்காகக் காத்திருக்காமல் பாதுகாப்பு உடைகளை அவரே வடிவமைத்துத் தைத்தார். மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில், பருத்தி துணிகளைப் பயன்படுத்தி வண்ணமிகு நிறங்களில் பாதுகாப்பு ஆடையைத் தயாரித்தார்.

மாகாணம் முழுவதும் நிலவி வந்த பி.பி.இ உடை பற்றாக்குறையினைப் போக்குவதற்கு, ‘கவுன் ஃபார் டாக்டர்ஸ்' என்ற பெயரில் கிரவுட்ஃபண்டிங் மூலம் ரூ.30 லட்சம் நிதி திரட்டி, பி.பி.இ ஆடைகளைத் 
தயாரித்தார். பாதுகாப்பு உடைகளைத் தைத்து அவற்றை மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார். 

7 ஆயிரம் வண்ணமிகு பாதுகாப்பு உடைகளை அனுப்பி, மருத்துவர்கள் மற்றும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். அதற்காக, கடந்த ஆண்டு விக்டோரியா மாகாணத்தில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ‘விக்டோரியா லோக்கல் ஹீரோ' விருதினையும் பெற்றார்.

Next Story