பேஷன் உலகில் கலக்கும் சந்தியா


பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
x
தினத்தந்தி 22 Nov 2021 5:30 AM GMT (Updated: 13 Nov 2021 10:19 AM GMT)

சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.

சென்னையைச் சேர்ந்த 15 வயது மாணவி சந்தியா, இளம் வயதிலே தனக்கென குறிக்கோளை அமைத்துக்கொண்டு, அதை நோக்கி விடாமுயற்சியோடு செயல்படுகிறார். ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்று, பதினோராம் வகுப்பில் பேஷன் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் படித்து வருகிறார்.

மிஸ் டீன் இந்தியா 2021 போட்டியில் ‘மிஸ் டீன் கான்டினென்டல் இந்தியா’ பட்டம் பெற்றுள்ளார். இதன் அடுத்தகட்ட போட்டிக்காக விரைவில் அமெரிக்கா செல்லப்போகிறார். அங்கு “இந்தியா சார்பாக பங்கு பெற்று வெற்றி பெறுவேன்” என நம்பிக்கையுடன் கூறுகிறார். சந்தியாவுடன் ஒரு சந்திப்பு..

படிப்பதற்கும், போட்டியில் பங்கு பெறுவதற்கும் எவ்வாறு நேரம் ஒதுக்குவீர்கள்?

சிறு வயதில் இருந்தே நேரத்தின் அருமை உணர்ந்து செயல்படுகிறேன். காலையில் 5 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். பின்பு ஆடை வடிவமைப்பாளர் துறை சார்ந்த நடைமுறை செயல்பாடுகளில் ஈடுபடுவேன். 

அதன் பிறகு பள்ளிக்குச் சென்று விடுவேன். மாலையில் வீடு திரும்பியதும் சிறிது நேரம் ஓய்வு எடுப்பேன். அப்பொழுது சரும பராமரிப்புக்கு தேவையானவற்றை செய்வேன். பின்பு பாட சம்பந்தமான வேலைகளை முடித்து விட்டு, அடுத்த கட்ட போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்வேன்.

ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்ந்தெடுத்தது ஏன்?

சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.

பேஷன் மீது எனக்கு இருந்த ஆர்வம், இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக ‘மிஸ் டீன்  இந்தியா 2021' போட்டியில் கலந்து கொண்டேன்.



தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்?

என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது தாய் விதுலா, தந்தை பாலாஜி மற்றும் என் பள்ளி ஆசிரியர்கள். எனது அம்மா, நான் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவரது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, போட்டியில் கலந்து கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். 

அப்பா எனக்கு தேவையான பண உதவிகளை செய்து, என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். என் தங்கையும் எனக்கு உறுதுணையாக இருந்தார். சிறப்பு  பயிற்சி ஆசிரியர் யமுனா, பள்ளி ஆசிரியர்களின் துணை இருந்ததால் தான், பாடங்களை கற்றுக்கொண்டே போட்டியிலும் வெற்றி பெற முடிந்தது.

‘மிஸ் டீன் கான்டினென்டல்' பட்டம் பற்றி கூறுங்கள்?

இந்த போட்டி, வாழ்க்கையில் என்னை அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான மிகச்சிறந்த அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. இந்தப் போட்டியைப் பற்றி எந்த விபரமும் தெரியாமல் தான் விண்ணப்பித்தேன். இதில் பல விதமான சுற்றுகள் இருந்தது. தமிழகத்தில் இருந்து நான் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

ஒவ்வொரு சுற்றும் எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. எனக்கு மிருகங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை உண்டு. இப்போட்டியில் ஒரு சுற்றுக்காக, மிருகங்கள் தங்குவதற்கு ஏற்ப இடங்களை குறைந்த செலவில் அமைத்து தருவது, சாலையோர மிருகங்களுக்கு உதவுவது, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட வீட்டில் இருந்த வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பது போன்ற வேலைகள் செய்தேன். மனவலிமை, தைரியம், உழைப்பு ஆகியவற்றால் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றேன்.

உங்கள் அடுத்த இலக்கு என்ன?

பேஷன் டிசைனிங் துறையில் கேமராவிற்கு முன்னும், பின்னும் வேலை செய்து சிறந்து விளங்க வேண்டும். சிறந்த ஆடை வடிவமைப்பாளராக வளர வேண்டும் என்பது தான் என் ஆசை.

ஆடை வடிவமைப்பு தவிர்த்து உங்களுக்கு பிடித்தது எது?

எனக்கு நாட்டியத்தின் மீது ஆர்வம் அதிகம். முறையாக பரதநாட்டியம் கற்று வருகிறேன்.

உங்கள் முன்னுதாரணம் யார்?

நான் முன்னுதாரணமாக நினைப்பது முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா. காரணம் அவரும் எந்த விதமான அனுபவமும் இல்லாமல், தன் உழைப்பால் முன்னேறியவர். 
அவரைப் போலவே எனக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை.

Next Story