இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்


இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்
x
தினத்தந்தி 18 Oct 2021 11:27 AM GMT (Updated: 18 Oct 2021 11:27 AM GMT)

கூந்தலை வறண்டு போகாமல் பராமரிக்க வேண்டியது முக்கியமானது. ஒரு ஸ்பிரே பாட்டிலில், ஆலிவ் எண்ணெய் 4 சொட்டு, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 2 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு தண்ணீர் இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து, கூந்தலில் அவ்வப்போது ஸ்பிரே செய்யவும். இதன் மூலம் தலைமுடி வறண்டு போகாமல் இருக்கும்.

பெண்கள் அதிகமாகக் கவலைப்படும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு. உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு, தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மனஅழுத்தம், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், வேதிப் பொருட்கள் கலந்த ஷாம்பு பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிரலாம். இயற்கையான முறையிலே எவ்வாறு முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்பதை இங்கு காணலாம்.

முடியின் வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியமானது. 
உளுந்து (பொடியாக அரைத்தது) - ½ கிலோ, 
வெந்தயம் (பொடியாக அரைத்தது) - 100 கிராம், 
செம்பருத்திப் பூ (நிழலில் உலர்த்தி பொடியாக அரைத்தது) - 100 கிராம். 

இவை மூன்றையும் நன்றாகக் கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். பின்பு  பச்சைப் பயறு (பொடியாக அரைத்தது) - 200 கிராம் எடுத்து  தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

தலைக்கு குளிப்பதற்கு முன்பு, உளுந்து கலவை 2 தேக்கரண்டி, பச்சைப் பயறு பொடி ½ தேக்கரண்டி இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாகக் கலந்து, முடியின் வேர்க்கால்களில் பூசவும். பின்பு விரல் நுனியைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும். 



20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்கவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும். இந்த முறையைப் பயன்படுத்தும்போது, வேதிப் பொருட்கள் கலந்த ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

கூந்தலை வறண்டு போகாமல் பராமரிக்க வேண்டியது முக்கியமானது. ஒரு ஸ்பிரே பாட்டிலில், ஆலிவ் எண்ணெய் 4 சொட்டு, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 2 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு தண்ணீர் இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து, கூந்தலில் அவ்வப்போது ஸ்பிரே செய்யவும். இதன் மூலம் தலைமுடி வறண்டு போகாமல் இருக்கும். முடியின் வேர்க்கால்கள் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். பின்பு அதை ½ லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடுபடுத்தவும். பின்பு இந்த எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். முடியின் வேர்க்கால்களில் இதைத் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும். 



Next Story