கற்பக மூலிகை தூதுவளை


கற்பக மூலிகை தூதுவளை
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 23 April 2022 12:30 PM GMT)

தூதுவளையைத் துவையலாக தயாரித்து தொடர்ந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் வலிமை அதிகரிக்கும். இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

யன்கள் பல கொண்டதாக இருப்பதால், ‘தூதுவளை’ கற்பக மூலிகையாகக் கருதப் படுகிறது. சாதாரணமாக வேலி ஓரங்களில் இதனைப் பார்க்க முடியும். தூதுவளை சளி, இருமல், கபம் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் என்பதைப் பலரும் அறிவோம். ஆனால் இதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது தூதுவளை.

தூதுவளையில் முட்கள் இருக்கும் என்பதால், அவற்றை கவனமாக நீக்கி விட்டுப் பயன்படுத்த வேண்டும். இது அதிக வெப்பமுடைய தாவரம் என்பதால், குளிர் மற்றும் மழைக் காலங்களில் பயன்படுத்துவது அதிக பயன் தரும். வெயில் காலங்களில் துவையல், தோசை மற்றும் நெய்யில் வதக்கி சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

தூதுவளையைத் துவையலாக தயாரித்து தொடர்ந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் வலிமை அதிகரிக்கும். இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். பெண்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருப்பை புற்றுநோய்க்குத் தூதுவளை சேர்த்த மருந்து நல்ல பலன் அளிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இது ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தும். காற்று, மழை, வெயில் என்று சீதோஷ்ண நிலை மாறி வரும் நேரங்களில் ஏற்படும் சளி, இருமலுக்கு இது நல்ல மருந்தாக செயல்படும். வீடுகளில் சிறிய தொட்டியிலும் தூதுவளையைச் சுலபமாக வளர்க்கலாம்.

தூதுவளை தோசை மாவு செய்முறை:
தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை –- ½ கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து –- ¼ கப்
வெந்தயம் –- ½ டீஸ்பூன்
இஞ்சி –- 1 துண்டு
பச்சை மிளகாய் - –2
உப்பு –- தேவையான அளவு

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மாவுக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும். இப்போது தூதுவளை தோசை மாவு தயார். புளித்த பின் தோசையாகச் சுட்டு சாப்பிடலாம். 

Next Story