மனநலத்தை மேம்படுத்தும் பழக்கங்கள்


மனநலத்தை மேம்படுத்தும் பழக்கங்கள்
x
தினத்தந்தி 10 Jan 2022 5:30 AM GMT (Updated: 9 Jan 2022 6:24 AM GMT)

பிறர் நமக்குச் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வது நல்ல பழக்கம். அதேசமயம் உங்களைச் சுற்றி நேர்மறையான செயல்கள் நடைபெறுவதற்காக, இயற்கைக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துங்கள்

னம் குழப்பம் இல்லாமல் தெளிவாக இருந்தால், செய்யும் செயலில் நேர்த்தி இருக்கும். மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை ஆற்றலோடு செயல்பட வேண்டும். இதற்கு, அன்றாட வாழ்வில் 5 முக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை வழக்கமாக மாற்றினால் வாழ்வில் எளிதில் வெற்றி பெற முடியும். அவற்றை இங்கே தெரிந்துகொள்வோம்.

1. உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்:
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்போது, மனதில் தன்னம்பிக்கையும், இலக்கை அடையும் ஆற்றலும் உருவாகும். இதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வது  அவசியம். உடலை வருத்திக்கொண்டு பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அன்றாடம் மேற்கொள்ளும் வீட்டு வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலே உடலும், மனமும் லேசாகும். இவற்றுடன், 30 நிமிடமாவது தசைகளை அசைத்து செய்யும் எளிய வகையிலான பயிற்சிகளைச் செய்யலாம். இதன் மூலம்  மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்; நினைக்கும் இலக்கை எளிதில் எட்ட முடியும்.

2. நன்றி சொல்லிப் பாராட்டுங்கள்:
பிறர் நமக்குச் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வது நல்ல பழக்கம். அதேசமயம் உங்களைச் சுற்றி நேர்மறையான செயல்கள் நடைபெறுவதற்காக, இயற்கைக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துங்கள். காலை முதல் இரவு வரை உங்களின் ஒவ்வொரு செயலுக்கும், கிடைக்கும் ஒவ்வொரு நன்மைக்கும் நன்றி செலுத்தி, இயற்கையை மனதார ரசியுங்கள். அதில் உள்ள அற்புதங்களைப் பாராட்டுங்கள். இந்தப் பழக்கம் உங்களுக்குள் நல்ல எண்ணங்களை எளிதாகக் கொண்டு வரும்.

3. ஆழ்ந்த உறக்கம் தேவை:
மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் தேவை. இரவில் தினமும் 8 மணி நேரம் எந்தவித இடையூறும் இன்றி ஆழ்ந்து உறங்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன்பு மொபைல், டி.வி, கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்களைத் தவிர்க்க வேண்டும். படுக்கும் அறையை குளிர்ச்சியாகவும், சற்று இருட்டாகவும் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் உடல் உழைப்பை மேம்படுத்திக் கொள்ளும்போது, ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதுடன், மறுநாள் புத்துணர்வுடன் எழ முடியும்.

4. உடலை  நீரேற்றத்துடன் வைத்திருங்கள்:
மூளை சீராக செயல்படுவதற்கு, உடலுக்கு 73 சதவீதம் நீர்ச்சத்து தேவை. உடல் நீரேற்றத்துடன் இருக்கும்போது, எண்ணங்களும் தெளிவாகும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதைப் பாதிக்காமல் இருக்கும். ஒரு நாளில், 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கும்போது, உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

5. பிடித்த கலையைத் தேர்ந்தெடுங்கள்:
இயந்திர மயமான உலகில், உங்களை ஒன்றிணைக்கும் போது, மனம் சோர்வடையும். இதன் காரணமாக மன அழுத்தம், பலவித வியாதிகள் போன்றவை அணிவகுக்கும். எனவே, தினமும் ஒரு மணி நேரமாவது, உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு கலையை மேற்கொள்ளுங்கள். ஓவியம் வரைவது, பிடித்த உணவை சமைப்பது; அலங்கரிப்பது, வீட்டை அழகு படுத்துவது, நடனம், பாட்டு என மனதுக்குப் பிடித்த செயல்களை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம், மன அழுத்தம் எளிதில் குறைவதுடன், ஆரோக்கியமும் மேம்படும்.


Next Story