ஒரு நாயகி உருவாகிறார்


ஒரு நாயகி உருவாகிறார்
x
தினத்தந்தி 15 Nov 2021 5:30 AM GMT (Updated: 13 Nov 2021 11:01 AM GMT)

நான் ‘ரைட் ஆர்ம் லெக் ஸ்பின்னர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்' ஆக விளையாடினேன். நாக்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ஜார்கண்ட், புதுச்சேரி, பெங்கால், டெல்லி மற்றும் கோவா அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் எனது பங்களிப்பை சிறப்பாக செய்தேன்.

19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் தமிழ்நாடு மாநில மகளிர் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஐஸ்வர்ய லட்சுமி. தீவிரமான பயிற்சிக்கும், முயற்சிக்கும் பரிசாக இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவரது பேட்டி.

“திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் விளையாடி வரும் எனது சகோதரர்கள் இருவரையும் பார்ப்பதற்காக, பள்ளி விடுமுறை நாட்களில் தாயாருடன் செல்வேன். அப்போது கிரிக்கெட் விளையாட்டின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை கவனித்த மைய நிர்வாகி ரமேஷ் குமார், என்னையும் பயிற்சியில் சேர்ந்து விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தினார். அவ்வாறுதான் கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்தேன்.

என் அம்மா பயிற்சி மையத்துக்கு அருகில் இருந்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அப்பா அங்குள்ள நூற்பு ஆலையில் ஓட்டுநராக வேலை செய்கிறார்.

எங்கள் கிராமத்தில் இருந்து பயிற்சி மையத்துக்கு வந்து போவது சிரமமாக இருந்தது. போக்குவரத்து செலவை சமாளிக்கும் அளவுக்கு குடும்ப பொருளாதார சூழ்நிலை இல்லை. பள்ளி படிப்பும் பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகி, என் அம்மாவிற்கு 

‘‘பயிற்சி மையத்திலேயே வேலை வழங்கியதோடு மட்டுமில்லாமல், தங்குவதற்கு மைய வளாகத்திலே வீடும் ஒதுக்கிக் கொடுத்தார். அதுவரை கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்த எனக்கு பயிற்சியைத் தொடர்வதற்கு ஏதுவாக மையத்தின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் இலவசமாக படிக்கவும் ஏற்பாடு செய்தார். அவருடைய உதவியால் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.’’



மாநில இளையோர் அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி சொல்லுங்கள்?

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி தேர்வு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில் பங்கு பெறுவதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 270-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துகொண்டோம்.

அதிலிருந்து ‘நெட் செலக்சன்' விளையாட்டு மூலம் 60 பேரை முதலில் தேர்வு செய்தார்கள். பின்பு 4 அணிகளாகப் பிரித்து விளையாட வைத்து அதிலிருந்து 30 பேரை தேர்ந்தெடுத்தார்கள். நெட் பிராக்டிஸ் மற்றும் மேட்ச் மூலம் கடைசியாக 25 பேரை அணிக்காக தேர்வு செய்தார்கள். அதில் நானும் ஒருத்தி.

அணியில் உங்கள் பங்களிப்பு என்ன?

நான் ‘ரைட் ஆர்ம் லெக் ஸ்பின்னர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்' ஆக விளையாடினேன். நாக்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ஜார்கண்ட், புதுச்சேரி, பெங்கால், டெல்லி மற்றும் கோவா அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் எனது பங்களிப்பை சிறப்பாக செய்தேன்.

எதிர்கால இலக்கு என்ன?

இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. ஆர்வமும், வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் குடும்ப, பொருளாதார பின்னணிகள் பொருட்டே இல்லை என்பது பெண்களுக்கு இவர் சொல்ல வரும் செய்தியாகும்.

Next Story