கோவை மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை
கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான மாத சம்பளம் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்தும் முறையாக சம்பளம் வழங்க கோரியும் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம்(சி.ஐ.டி.யு.) மாவட்ட பொதுச்செயலாளர் ரத்தினகுமார் தலைமையில் 30–க்கும் மேற்பட்டவர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக துணை ஆணையாளர் காந்திமதி மற்றும் நகர் நல அலுவலர் செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பிறகு துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.






