சேலம் ரெயில்நிலைய நடைமேடை 19-ந் தேதி திறப்பு தேசிய கொடியை ஏற்றி கோட்ட மேலாளர் தகவல்


சேலம் ரெயில்நிலைய நடைமேடை 19-ந் தேதி திறப்பு தேசிய கொடியை ஏற்றி கோட்ட மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2017 10:45 PM GMT (Updated: 15 Aug 2017 9:25 PM GMT)

சேலம் ரெயில்நிலைய நடைமேடை 19-ந் தேதி திறக்கப்படுகிறது என்று சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.

சேலம்,

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து விழாவில் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பேசியதாவது:-

சேலம் ரெயில் நிலையத்தில் 2-வது நுழைவாயில் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம், ரெயில் நிலைய மேலாளர் அலுவலக அறை, முக்கிய பிரமுகர்கள் அறை மற்றும் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம் ஆகியவற்றை வருகிற 19-ந் தேதி காணொலிக்காட்சி மூலம் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு திறந்து வைக்கிறார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் தூய்மையை மேம்படுத்தும் வகையில் இன்று (புதன்கிழமை) முதல் 31-ந் தேதி வரை தூய்மை வார விழிப்புணர்வு மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. கோவை ரெயில் நிலையத்தில் செயலி அடிப்படையில் வாடகைக்கார் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கோட்டத்தின் இதர ரெயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படையின் மோப்பநாய் சாகசம், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. இதில் சேலம் கோட்ட கூடுதல் ரெயில்வே மேலாளர் சந்திரபால், ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் பொன்ராஜ் மற்றும் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கோர்ட்டு

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஸ்ரீதரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி விஜயகுமாரி, மாஜிஸ்திரேட்டுகள் சண்முகபிரியா, கணேசன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோர்ட்டு வளாகத்தில் சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய சிறை

சேலம் மத்திய சிறையில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. சிறை சூப்பிரண்டு ஆண்டாள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தினத்தையொட்டி சிறையில் உள்ள கைதிகளுக்கு காலையில் வெண் பொங்கல், வடையும், மதியம் வெஜிடபுள் பிரியாணி மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது.


Next Story