சோமாலிய கடற்கொள்ளையர்கள் 60 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை


சோமாலிய கடற்கொள்ளையர்கள் 60 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை
x
தினத்தந்தி 9 Sep 2017 10:17 PM GMT (Updated: 9 Sep 2017 10:16 PM GMT)

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 60 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

சோமாலிய கடற்கொள்ளையர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த 91 பேரை கடந்த 2011–ம் ஆண்டு பணய கைதிகளாக பிடித்தனர். இவர்களில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 24 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடல் பகுதியில் வந்த போது, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் அந்த கப்பலை மடக்கினார்கள். அந்த கப்பலில் பணயக்கைதிகளாக இருந்த அனைவரையும் மீட்டனர்.

மேலும் கடலில் குதித்து தப்பிக்க முயன்ற சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைது செய்தனர்.

அவர்களது கப்பலில் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர்கள் மீது தனித்தனியாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் 3 முறை தனித்தனியாக தீர்ப்பு வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு 59 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது.
60 பேருக்கு ஜெயில்

இந்த நிலையில், மேலும் 61 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதில் ஒருவர் விசாரணையின் போது இறந்து போனார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் 60 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 4–வது தீர்ப்பு இதுவாகும். இதுவரை மொத்தம் 119 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு ஜெயில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story