புதுக்கோட்டையில் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையில் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 10:45 PM GMT (Updated: 22 Nov 2017 7:20 PM GMT)

புதுக்கோட்டையில் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுக்கோட்டை,

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.13-50-க்கு விற்ற சர்க்கரை விலையை தமிழக அரசு ரூ.25 ஆக உயர்த்தி வினியோகித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல புதுக்கோட்டை கீழ 2-ம் வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நேற்று தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் நைனாமுகமது தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். இதேபோல கோவில்பட்டி பகுதியில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் தலைமையிலும். மேலமேட்டுதெரு பகுதியில் வீரமணி தலைமையிலும், ராப்பூசலில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கந்தர்வகோட்டை ஒன்றிய தி.மு.க.சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியய்யா, நகர செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் கந்தர்வகோட்டையில் உள்ள அமுதம் ரேஷன் கடைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைபோன்று தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பாகவும் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்அய்யா தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கீரமங்கலத்தில் தி.மு.க. நகர செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நகரம் கிராமத்தில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஞான.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

திருவரங்குளம் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். குளவாய்ப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்ச்செல்வன் என்ற சேகர் தலைமை தாங்கினார். வேப்பங்குடியில் மெய்யர், கைக்குறிச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வம்பன் நால்ரோட்டில் முன்னாள் கவுன்சிலர் அயூப்கானும் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல திருக்கட்டளை, வல்லத்திராக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமயம் ஒன்றியத்தில் உள்ள கோட்டையூர், கோனாபட்டு, ராங்கியம், நற்சாந்துபட்டி ஊனையூர் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ. திருமயம் ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story