‘ஒகி’ புயல் தாக்குதலுக்கு பிறகு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் மீனவர்கள்


‘ஒகி’ புயல் தாக்குதலுக்கு பிறகு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் மீனவர்கள்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:45 PM GMT (Updated: 13 Dec 2017 5:20 PM GMT)

‘ஒகி‘ புயல் தாக்குதலுக்கு பிறகு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல குளச்சல் விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்கள் விசைப்படகில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகிறார்கள். அவர்கள் 12 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்கள். அவ்வாறு செல்லும் மீனவர்கள் டீசல், குடிநீர், உணவு போன்றவற்றை கொண்டு செல்வது வழக்கம்.

மேலும், பிடித்த மீன்கள் அழுகாமல் இருப்பதற்காக விசைப்படகில் பதப்படுத்தி வைப்பதற்காக ஐஸ்கட்டிகளை துறைமுகத்தின் கரையில் இருந்து எந்திரம் மூலம் ஏற்றுவார்கள்.

முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்தநிலையில் ‘ஒகி‘ புயல் தாக்குதலுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மீன்பிடிப்பதற்காக இன்னும் இரு தினங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருப்பதால், அவர்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். நேற்று காலையில் இருந்து விசைப்படகுகளில் டீசல், ஐஸ்கட்டிகள் நிரப்பும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். வலைகளை சீரமைக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story