திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகள் கடும் எதிர்ப்பு


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Dec 2017 11:00 PM GMT (Updated: 18 Dec 2017 9:20 PM GMT)

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு- தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாநகர சாலையோரங்களில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கலெக்டர் அலுவலகத்துக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கும் பல்வேறு புகார்கள் வந்தன. அதன் பேரில் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பாதுகாப்புடன் மரக்கடை, வெங்காயமண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இதைப்போன்று திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா சாலையில் இருந்து அரியமங்கலம் பால்பண்ணை வரை சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து இருந்த ஏராளமான கடைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டன. இதனால் அந்தப்பகுதியில் தற்போது போக்குவரத்து நெருக்கடியின்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் திருச்சி மத்திய பஸ்நிலையம், மெக்டோனால்ட்ஸ் ரோடு, ஸ்டேட் பாங்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பொன்மலை கோட்ட அலுவலக உதவி ஆணையர் தயாநிதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் மத்திய பஸ்நிலைய வளாக பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடைக்காரர்கள் முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டிருந்தனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மத்திய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஓட்டல்கள், பழக்கடைகள், டீக்கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த மேற்கூரை, தகர கொட்டகை, பந்தல்கள், பெஞ்சுகளை அதிரடியாக அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் சச்சினாந்தம் தலைமையில், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆவின் பூத் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக பகுதியில், மாடிக்கு செல்லும் படிகளில் வியாபாரிகள் தங்களது கடை பொருட்களை வைத்திருந்தனர். அந்த மாடிப்படிகளில் செல்லும் வழியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கதவில் போடப்பட்டிருந்த பூட்டை மாநகராட்சி அதிகாரிகள் உடைத்து, அதில் இருந்த பொருட்களை லாரிகளில் ஏற்றினர்.

இதனைக்கண்ட வியாபாரிகள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு அங்கு விரைந்து வந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் மத்திய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும், அதன் உரிமையாளர்கள் அடைத்தனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதையடுத்து கோவிந்தராஜூலு தலைமையில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் மத்திய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கண்டோன்மெண்ட் காவல் உதவி மையம் அருகே தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பொன்மலை கோட்ட உதவி கமிஷனர் தயாநிதி தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் சச்சினாந்தம் ஆகியோர் கோவிந்தராஜூலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள வ.உ.சி. சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய பிறகே பஸ் நிலையத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோவிந்தராஜூலு அதிகாரிகளிடம் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் வியாபாரிகளின் தர்ணா போராட்டமும், ஒரு மணி நேரம் நடந்த கடையடைப்பு போராட்டமும் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து வழக்கம்போல் மத்திய பஸ் நிலையத்தில் வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் வியாபாரிகள் கடையடைப்பு, தர்ணா போராட்டம் நடத்தியது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து மெக்டோனால்ட்ஸ் சாலை, ஸ்டேட் பாங்கு சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு பெட்டி கடைகள் அகற்றப்பட்டன. 

Next Story