கடன் மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர் நாட்டில் உள்ள வங்கிகளின் கதி என்ன ஆகுமோ?- ராகுல்காந்தி ஆதங்கம்


கடன் மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர் நாட்டில் உள்ள வங்கிகளின் கதி என்ன ஆகுமோ?- ராகுல்காந்தி ஆதங்கம்
x
தினத்தந்தி 4 April 2018 11:30 PM GMT (Updated: 4 April 2018 10:21 PM GMT)

கடன் மோசடி செய்தவர்களால் நாட்டில் உள்ள வங்கிகளின் கதி என்ன ஆகுமோ என ராகுல்காந்தி ஆதங்கம் அடைந்தார்.

பெங்களூரு,

கடன் மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர் என்றும், இதனால் நாட்டில் உள்ள வங்கிகளின் கதி என்ன ஆகுமோ? என்றும் கூறி தாவணகெரேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆதங்கம் அடைந்தார்.

கர்நாடக காங்கிரஸ் சார்பில் சரக்கு-சேவை வரி திட்டம், பண மதிப்பிழப்பு திட்டம் ஆகியவை குறித்து வணிகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் தாவணகெரேயில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி மீது ஆகட்டும், நீதித்துறை மீது ஆகட்டும் மரியாதை இல்லை. ஆட்சியை நடத்துபவர்களைச் சுற்றிலும் இருப்பவர்கள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்கிறார்கள். இது தொடர்கதையாகி விட்டது. வங்கிகளுக்கு ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது. பணத்தை மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இனிவரும் நாட்களில் வங்கிகளின் கதி என்ன ஆகுமோ? என்று தெரியவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் கருத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ளவில்லை. நீதித்துறையையும் மத்திய அரசு மதிப்பது இல்லை. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியாயத்திற்காக மக்கள் முன் வந்தனர். இத்தகைய நிகழ்வு இந்திய வரலாற்றில் நடந்தது இல்லை.

அரசியல் சாசனத்தின்படி பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்புகள் அவற்றுக்குரிய அதிகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புகளை பாழ்படுத்தக்கூடாது. அவற்றை பாதுகாக்க வேண்டும். இந்த எல்லா அமைப்புகள் மீதும் காங்கிரசுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் பா.ஜனதா இதற்கு எதிராக செயல்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இந்தியாவை வழிநடத்துகிறது. ஒரே ஆலோசனையை அந்த அமைப்பு நமது நாட்டில் திணிக்கிறது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது கவலை அளிப்பதாக உள்ளது. இளைஞர்கள் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தி பணியாற்றினால் நாட்டை மட்டுமல்ல, இந்த உலகத்தையே மாற்றிக்காட்ட முடியும்.

நாட்டில் நிகழ்ந்த வெண்மை புரட்சி, பசுமை புரட்சி மற்றும் தொலைத்தொடர்பு புரட்சிக்கு இளைஞர்களே காரணம். நாட்டில் இளைஞர் சக்தியை மத்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிரதமர் மோடி, தான் ஒருவர் மட்டுமே இந்த நாட்டில் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நினைக்கிறார். அனுபவம் வாய்ந்த தலைவர்களின் ஆலோசனையை அவர் கேட்பது இல்லை.

முக்கியமான அமைப்புகளை அவர் புறக்கணிக்கிறார். சொந்த கட்சியின் மூத்த தலைவராக உள்ள அத்வானியின் பேச்சையும் மோடி கேட்பது இல்லை. அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பிரதமர் மோடி எத்தனை முறை அத்வானியின் ஆலோசனைகளை பெற்றார்?. பண மதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக 10 லட்சம் நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பியது. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சரக்கு-சேவை வரியை எளிமைப்படுத்துவோம். ஏழைகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் ஒரே வரி முறையை அமல்படுத்துவோம்.

முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இந்த சரக்கு-சேவை வரியை கொண்டு வந்தது. இதை அப்போது முதல்-மந்திரியாக இருந்த மோடி எதிர்த்தார். ஆனால் இப்போது அந்த வரி திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார். இது மக்களுக்கு சுமையாக அமைந்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை இல்லாமல் செயல்படுகிறது.

மோடி மற்றும் நிதி மந்திரி அருண்ஜெட்லியை அணுகி, பலம் உள்ள 20 பேர் மட்டுமே முன்னேற்றம் அடைந்துள்ளனர். மற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக வெறுப்பில் உள்ளனர். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போதும் மோடி அரசு தனது தவறை திருத்திக்கொள்ள தயாராக இல்லை.

பிரதமர் மோடி விஜய் மல்லையா, நிரவ்மோடி போன்ற தொழில் அதிபர்களுக்கு கதவுகளை திறந்து வைத்துள்ளார். சிறிய தொழில் செய்பவர்களுக்கு மோடி வாய்ப்பு என்ற கதவை மூடிக்கொண்டார். தொழில் பயிற்சியுடன் கூடிய பணியாளர்களை சீனா உருவாக்குகிறது. வங்கி நடவடிக்கைகளை இணைத்து சீனாவில் தயாரிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. அதனால் அந்த நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் இந்தியா அவ்வாறு எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் பணியை அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இதனால் அனில் அம்பானிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. மக்கள் விரோத கொள்கையை மோடி பின்பற்றி வருகிறார். நாட்டை பாழ்படுத்தும் கொள்கைகளை மோடி அமல்படுத்துகிறார் என ராகுல் காந்தி பேசினார்.

Next Story