மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேட்டி


மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 23 April 2018 11:15 PM GMT (Updated: 23 April 2018 9:10 PM GMT)

மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதுக்கோட்டை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடந்த மனிதசங்கிலியில் கலந்து கொள்ள தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது குடிநீர் பிரச்சினையை போக்க செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. இதனால் தான் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டு உள்்ளது. புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் செயல்படுத்த காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது தான் இன்றைய குடிநீர் பிரச்சினைக்கு காரணம். அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு அமைச்சராக இருக்க வேண்டியவர், மக்களை சாகடிக்கும் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு உள்ளேன். இந்த குறைகளை அரசிடமோ அல்லது மாவட்ட கலெக்டரிடமோ எடுத்து கூறி குறைகளை களைய முற்படுவேன்.

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுவது உண்மை தான். நீட் பிரச்சினையாக இருந்தாலும் சரி. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அடிக்கும் கொள்ளைகளுக்கு பா.ஜ.க. அரசு துணை நிற்கிறது. வருமான வரித்துறை சோதனை செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதருக்கு கடிதம் எழுதுகின்றனர். ஆனால் அரசு சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்பதற்கு இந்த அரசிற்கு தைரியம் இல்லை. தங்களுடைய பதவியை காப்பாற்றி கொள்வதற்காக பிரதமரை அவர்கள் சந்திப்பார்கள்.அந்த கடிதம் கூட அதற்காக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது தி.மு.க. தான். நடத்த முடியாத நிலையில் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தியதும் தி.மு.க. தான். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தோல்வி அடைவோம் என்பதற்காக தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க. அரசு உள்ளது. இதனால் உள்ளாட்சிகளுக்கு வரும் நிதிகள் திரும்பி சென்று விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருப்பவரின் பணி கொள்ளையடிப்பது, மாமுல் வாங்குவது, வருமான வரித்துறையிடம் சிக்குவதுமாக உள்ளது. மேலும் அவர் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மறுநாளே அமைச்சர் விஜயபாஸ்கர் சிறைக்கு செல்வது உறுதி என்றார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு காமராஜபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், தங்களது பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினை, மருத்துவமனையை இடம் மாற்றியது குறித்து எடுத்துக்கூறினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது பிரச்சினைகள் அனைத்து தீர்க்கப்படும் என்றார்.

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தனை, மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

Next Story