‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக தஞ்சையில் இருந்து ரெயில்-பஸ்களில் கேரளா புறப்பட்டு சென்ற மாணவர்கள்


‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக தஞ்சையில் இருந்து ரெயில்-பஸ்களில் கேரளா புறப்பட்டு சென்ற மாணவர்கள்
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 8:56 PM GMT)

‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக தஞ்சையில் இருந்து ரெயில்-பஸ்களில் மாணவர்கள் கேரளா புறப்பட்டு சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு மையம் எர்ணாகுளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வு எழுதுவதற்காக ரெயில் மற்றும் பஸ்களிலும், தனி வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கடந்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு மையங்கள் மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்பட 10 மையங் களில் நடைபெறுகிறது.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மாணவர்கள் காலை 9.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு எழுதும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் திருச்சி மையங்களை தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் சில மாணவர்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு 7 இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 190 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களில் 3 பேருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தவிர மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களிலும் பலருக்கு கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் தேர்வு மையத்தில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களிலும் சிலருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மையத்தை சேர்ந்த 17 மாணவிகள், 8 மாணவர்கள் என 25 பேருக்கு எர்ணாகுளம் மையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் எர்ணாகுளம் மையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இருப்பினும் தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் அவர்கள் அதற்கான உதவித்தொகை பெற கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளதால் அதன் பின்னரே எத்தனை பேர் வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதினர் என்ற விவரம் தெரிய வரும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தஞ்சையில் இருந்து 45-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக நேற்று புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து பஸ்கள் மூலமும், கார், வேன்கள் மூலமும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.

Next Story