சேலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


சேலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 May 2018 10:45 PM GMT (Updated: 15 May 2018 10:16 PM GMT)

சேலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டப்பட்டது.

சேலம்,

சேலத்தில் அடுத்தடுத்து உள்ள 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் ஜான்சன்பேட்டை இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது 57), ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் ராமாவரத்திற்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர் திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.26 ஆயிரம் திருட்டு போனது.

இதேபோல் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாட்ஷா சாகீப்(62). இவர் குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டு கதவின் பூட்டை உடைத்தும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.6 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டு தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

திருட்டு நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story