கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்


கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 11:00 PM GMT)

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம் பேசுகையில், காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், அவற்றை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏரிகளுக்கு செல்லக்கூடிய வரத்து வாய்க்கால்களை முறையாக சீர்செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், துங்கபுரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தொகையை, விவசாயிகள் வாங்கிய விவசாய கடனை கழித்து கொள்கின்றனர். கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு 15 நாட்களில் கொடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை பேசுகையில், பால் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பாடாலூரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை இரவு 9 மணிவரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்-கரும்பு வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் முருகேசன் பேசுகையில், விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்ட விளக்க பயிற்சிகள் நடைபெறும் போது விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச வேண்டும் என்றார். மேலும் விவசாயிகள் அரும்பாவூர் நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிப்பு செய்து வருகிற ஜூலை மாதம் வரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷேர் ஆட்டோ கட்டணத்தை குறைக்க வேண்டும். என்று கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் சாந்தா பேசுகையில், பாடாலூர் ஜவுளிப்பூங்காவிற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதற்கேற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிப்காட் நிறுவனம் மூலம் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், ஜவுளிப்பூங்காவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தைச்சுற்றி ஏற்கனவே அமைந்துள்ள 14 கல்குவாரிகளில் 12 குவாரிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதிக்கப்படவில்லை. மீதமுள்ள இரண்டு குவாரிகளுக்கும் அனுமதி காலம் விரைவில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. பாடாலூரில் ஜவுளிப்பூங்கா அமைவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாவட்ட நிர்வாகம் சிப்காட் நிறுவனத்திற்கு வழங்கும். ஏரிகளில் வண்டல் மண் விவசாயிகள் எவ்வளவு எடுக்கலாம் என்று கூறினார்.

முன்னதாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசுகையில், கலெக்டர் சாந்தா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தின் நிறைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்து பேசுவார்கள் என்றனர். ஆனால் கூட்டத்தின் முடிவில் அதிகாரிகள் பேசவில்லை. கூட்டத்தை முடித்து விட்டு கலெக்டா சாந்தா புறப்பட்டு சென்றார். இந்நிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை மட்டும் அதிகாரிகள் கேட்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தபாடில்லை என்று கூறி மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சந்தானகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைவாணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story