நூலகம், தார்சாலை வசதி கேட்டு கோரிக்கை அட்டைகளுடன் வந்து கலெக்டரிடம் வாலிபர் சங்கத்தினர் மனு


நூலகம், தார்சாலை வசதி கேட்டு கோரிக்கை அட்டைகளுடன் வந்து கலெக்டரிடம் வாலிபர் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:26 PM GMT (Updated: 11 Jun 2018 11:26 PM GMT)

நூலகம், தார்சாலை வசதி கேட்டு கோரிக்கை அட்டைகளுடன் வந்து கலெக்டரிடம் வாலிபர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இவரிடம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

பின்னர் கலெக்டர் ரோகிணி, மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை கலெக்டர் ரோகிணி பெற்றார். மேலும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

சேலம் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை அட்டைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், அன்னதானப்பட்டியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே 30 ஆண்டுக்கு முன்பு சேலம் நகராட்சியாக இருந்தபோது செயல்பட்டு வந்த நூலகம் தற்போது பாழடைந்த கட்டிடமாக காட்சியளிக்கிறது.

அதே பகுதியில் உள்ள பழனியப்பா காலனி, ராமசாமி தெரு, முனிசாமி தெரு, அகத்தியர் தெரு, கண்ணகி தெரு, மாரியம்மன் கோவில் மெயின்ரோடு போன்ற பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தார்சாலை பழுதடைந்து, மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நூலகத்தை அமைத்து, இப்பகுதி குழந்தைகளுக்கு உதவும் விதமாகவும், தார்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.

சூரமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், போடிநாயக்கன்பட்டி, காட்டூர், அண்ணாநகர், வேடுகாத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக 224-எண் கொண்ட ரெயில்வே பாலத்தை விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த பணி 6 மாதத்திற்கு மேலாகியும் முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.

Next Story