வங்கியில் கடன் வாங்கி தருவதாக 100 பேரிடம் ரூ.95½ லட்சம் மோசடி


வங்கியில் கடன் வாங்கி தருவதாக 100 பேரிடம் ரூ.95½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 Jun 2018 11:40 PM GMT (Updated: 12 Jun 2018 11:40 PM GMT)

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 100 பேரிடம் ரூ.95½ லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

டெல்லியை தலைமையிடமாக கொண்டு ஒரு கும்பல் மும்பையை சேர்ந்த பலரிடம் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி பேசியுள்ளனர். இதை நம்பியவர்கள் கடன் கிடைப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் அவர்கள் கேட்ட தொகையை செலுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த ஆசாமிகள் கூறியபடி வங்கி கடன் எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. அவர்கள் பணத்தை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதனால் பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 5 பேரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் ராஜேந்திர சிங் (வயது34), சச்சின் சிரோஹே (28), அனுப்குமார் (25), விக்ராந்த் சிங் (26), பிரசாந்த் சவுத்ரி (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்கள் சுமார் 100 பேரிடம் இருந்து ரூ.95 லட்சத்து 59 ஆயிரம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 20 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் விசாரணைக்காக மும்பை கொண்டு வரப்பட்டு உள்ளனர். 

Next Story