முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:15 PM GMT (Updated: 30 Jun 2018 9:20 PM GMT)

சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேளாங்கண்ணி,

சேலம்- சென்னை இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக 8 வழி சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சேலம்- சென்னை இடையே அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் இந்த போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லிபாபு கலந்து கொண்டார். அப்போது போலீசார் டெல்லிபாபுவை தரக்குறைவாக பேசியதுடன், கைது செய்தனர்.

இந்த நிலையில் சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லிபாபுவை தரக்குறைவாக பேசிய போலீசாரை கண்டித்தும், அவரை கைது செய்ததை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லிபாபுவை போலீசார் தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், கைது செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story