வங்காளதேசத்துக்கு எருமை மாடுகள் மூலம் திருட்டு செல்போன்கள் கடத்தல் - 3 பேர் கைது


வங்காளதேசத்துக்கு எருமை மாடுகள் மூலம் திருட்டு செல்போன்கள் கடத்தல் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 10:48 PM GMT (Updated: 9 July 2018 10:48 PM GMT)

மும்பையில் திருடிய செல்போன்களை மேற்கு வங்கத்தில் இருந்து, வங்காள தேசத்துக்கு எருமை மாடுகள் மூலம் கடத்திச்சென்று விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை ரெயில்வே போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய- மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் பயணிகளிடம் செல்போன்கள் திருடி வந்த ஜார்கண்ட் மாநிலம் சாகேப்கன்ஜ் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார்(வயது31), உமர்சேக்(19), உத்தம் குமார்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கைது செய்யப்பட்ட மகேஷ் குமார் செல்போன் பறிப்பு கும்பலின் தலைவன் ஆவார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வாலிபர்களை அழைத்து வந்து, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மாத சம்பளம் கொடுத்து செல்போன் திருட்டில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் அவர் அந்த வாலிபர்களுக்கு தங்கும் இடம், உணவு போன்ற வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளார்.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் மகேஷ் குமார் அதிக வாலிபர்களை அழைத்து வந்து செல்போன் திருட்டில் ஈடுபட வைத்துள்ளார்.

மகேஷ் குமார் மற்றும் அவரிடம் வேலை பார்த்த வாலிபர்கள் மும்பையில் மின்சார ரெயில்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் செல்போன் திருட்டில் ஈடுபடுவார்கள். அவர்கள் 15 நாட்களில் 30 முதல் 35 செல்போன்கள் திருடியவுடன் தங்களது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் செல்வார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் திருடி வைத்திருக்கும் செல்போன்களை எடுத்துக்கொண்டு மேற்கு வங்கமாநிலம் செல்வார்கள். மேற்கு வங்கத்தில் இருந்து பக்கத்து நாடான வங்காளதேசத்திற்கு திருட்டு செல்போன்களை அவ்வளவு எளிதாக கொண்டு செல்ல முடியாது. இதனால் அந்த கும்பல் மேய்ச்சலுக்கு செல்லும் எருமை மாட்டின் மீது செல்போன்களை மறைவாக கட்டி வைத்து, மேற்குவங்கத்தில் இருந்து வங்காளதேசத்திற்கு கடத்தி உள்ளனர்.

வங்காளதேசத்தில் இருக்கும் இந்த திருட்டு கும்பலுடன் தொடர்புடையவர் அந்த செல்போன்களை எடுத்து, அதை அங்கு விற்பனை செய்து உள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன. திருட்டு செல்போன்களுக்கான பணம் ஹவாலா அல்லது மீண்டும் எருமை மாடுகளிலேயே கட்டி அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த செல்போன் திருட்டு கும்பலில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்தியாவில் திருடப்பட்ட செல்போன்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயன்படுத்தப்படும் போது அதை மீட்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே இந்த கும்பல் மும்பையில் திருடிய செல்போன்களை வங்காளதேசத்திற்கு கடத்தி விற்பனை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story