நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கு வலுவான ஆதாரம் - மராட்டிய மேல்-சபையில் பட்னாவிஸ் தகவல்


நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கு வலுவான ஆதாரம் - மராட்டிய மேல்-சபையில் பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 12 July 2018 12:01 AM GMT (Updated: 12 July 2018 12:01 AM GMT)

புனே வன்முறையில் கைதானவர்களுக்கு நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மேல்-சபையில் தெரிவித்தார்.

நாக்பூர்,

புனே அருகே பீமா- கோரேகாவ் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த புனே போலீசார், கடந்த மாதம் தலித் போராளியான தாவலே உள்பட மும்பை, நாக்பூர் மற்றும் டெல்லியை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

இவர்களுக்கு நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அரசு நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று நாக்பூரில் நடந்த மராட்டிய மேல்-சபை கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது எம்.எல்.சி. கபில் பாட்டீல் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

அவர் தெரிவிக்கையில், நக்சலைட்டுகளில் கொள்கைகள் மீது பற்று கொள்வதற்கும், நக்சலைகட்டுகளாக செயல்படுவதற்கும் வித்யாசம் உள்ளது. எனவே நீதி விசாரணை முடியும் வரை கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “ கைதானவர்களுக்கு நக்சல் தலைவர்களுடன் நேரடி தொடர்பு இருந்ததற்கான வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்களின் இ-மெயில் பரிமாற்றங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

இதுகுறித்து நீதி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள்” என்றார்.

Next Story