ஜெயிலில் தள்ள நினைத்து புகார் செய்ததால் கள்ளக்காதலியை கொலை செய்தேன் - கைதான விவசாயி பரபரப்பு வாக்குமூலம்


ஜெயிலில் தள்ள நினைத்து புகார் செய்ததால் கள்ளக்காதலியை கொலை செய்தேன் - கைதான விவசாயி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 July 2018 10:22 PM GMT (Updated: 13 July 2018 10:22 PM GMT)

ஜெயிலில் தள்ள நினைத்து என்மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் கள்ளக்காதலியை கொலை செய்தேன் என கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

கள்ளக்காதலியை விவசாயி கொலை செய்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலாஜாவை அடுத்த செங்காடு அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (வயது 45). இவரது கணவர் நம்பிராஜன் இறந்து விட்டார். இவருக்கும் வாங்கூரை சேர்ந்த விவசாயி சுரேந்திரன் (39) என்பவருக்கும் இடையேகள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சுகுணாவின் வீட்டிற்கு கடந்த 10-ந் தேதி இரவு சென்ற சுரேந்திரன் அங்கு தகராறு செய்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த சுகுணா, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் நிலையத்திற்கு வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளார். தன் மீது புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெளியே காத்திருந்தார். போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்து விட்டு வெளியே திரும்பிய சுகுணாவை அவர் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சுகுணாவின் பின்னந்தலை மற்றும் உடலில் பல பாகங்களில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சுரேந்திரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வாலாஜா ‘டோல்கேட்’ அருகே பஸ்சில் இருந்து இறங்கிய சுரேந்திரனை ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் சுரேந்திரன் கூறியுள்ளதாவது :-

என் பெயர் சுரேந்திரன் (வயது 39) என்னை சுரேந்தர் என அழைப்பாளர்கள். எனக்கு சுகன்யா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். எனது சொந்த ஊர் சூரை மோட்டூர் ஆகும். தற்போது வாங்கூரில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான நிலத்தில் உழுவதற்கு டிராக்டரை பயன்படுத்துவேன். மற்ற விவசாயிகளின் நிலங்களிலும் வாடகை வாங்கிக் கொண்டு டிராக்டரில் உழுது தரும் வேலையையும் செய்து வந்தேன்.

எங்கள் ஊரில் இருந்து நான் பஸ்சில் செல்லும் போது எனக்கும் செங்காடு பகுதியை சேர்ந்த நம்பிராஜன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய இடங்களுக்கு சென்று மதுகுடிப்போம். நம்பிராஜன் அவரது நிலத்திலும் ஏர் உழுவதற்கு கூறினார். நானும் அவரது நிலத்தில் ஏர் உழுதுவிட்டு வாடகையை அவரது வீட்டிற்கு சென்று நம்பிராஜன் மனைவி சுகுணாவிடம் வாங்கி கொள்வேன்.

நம்பிராஜன் கண்டக்டர் வேலையில் இருந்து ஓய்வு பெற்று உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் போது என்னை அடிக்கடி அவர் வீட்டிற்கு வரக்கூறி அவருக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி வர கூறுவார். நானும் அதை செய்து வந்தேன். அதனால் நம்பிராஜனின் மனைவி சுகுணா என்னிடம் நெருக்கமாக பழகி வந்தார். நான் எனது மனைவியை போல் சுகுணாவை இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார வைத்து அழைத்துப் போய் வந்து கொண்டிருந்தேன்.

இந்த விவரம் என் மனைவி சுகன்யாவுக்கு தெரிந்து விட்டது. இதனால் அவர் சுகுணா வீட்டிற்கு வந்து சண்டையிட்டார். அதிலிருந்து சுகுணாவை யாருக்கும் தெரியாமல் அவரது நிலத்துக்கு சென்று சந்திப்பேன். இருவரும் தனிமையில் பேசி வந்தோம். எனது உறவினர்கள் என்னிடம் சுகுணாவுடன் இருக்கும் பழக்கத்தை விட்டு விடு என்று கண்டித்தார்கள். அப்படியிருந்தும் என்னால் சுகுணாவுடன் இருக்கும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து வந்தேன். என்னிடம் சுகுணா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். நானும் சுகுணாவிற்கு பணம் கொடுத்து வந்தேன்.

கடந்த 8-ந் தேதி என்னிடம் சுகுணா மீன் வாங்கி வர கூறினாள். நானும் மீன் வாங்கி கொடுத்தேன். ஆனால் அன்று அவள் எனக்கு மீன் வறுத்து தரவில்லை. அதனால் நான் அவளை தரக்குறைவாக பேசினேன். அதனால் சுகுணா என் மீது கோபம் கொண்டு மகளிர் போலீசில் புகார் செய்யப்போவதாக மற்றவர்களிடம் கூறியதாக எனக்கு தகவல் வந்தது.

கடந்த 10-ந் தேதி அன்று இரவு சுமார் 8 மணிஅளவில் சுகுணா வீட்டிற்கு சென்று ஆசைக்கு இணங்குமாறு கூறி கதவை தட்டினேன். அவர் கதவை திறக்கவில்லை. நான் பலமுறை கதவை தட்டி அழைத்தேன். ஆனாலும் சுகுணா கதவை திறக்கவில்லை. வீட்டின் உள்ளிருந்தபடியே “உன்னைப்பற்றி மகளிர் போலீசிடம் கூறுகிறேன்டா. நாளைக்கு நீ ஜெயிலில் இருக்க போகிறாய்” என கூறினாள்.

அதற்கு நான் அவளை கெட்ட வார்த்தையால் திட்டி எனது ஆசைக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினேன். இனிமேலும் சுகுணாவை விட்டுவைக்கக் கூடாது எனவும் அவளை எப்படியும் கொலை செய்து விட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தேன். சுகுணா கதவை திறக்காததால் என் நிலத்திற்கு வந்துவிட்டேன்.

மறுநாள் வழக்கம்போல் நிலத்தில் வேலை செய்தேன். மதியம் நான் செங்காட்டிற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் சுகுணா வாலாஜா பஸ்சில் ஏறி சென்றதாக தெரிவித்தனர். என்னைப்பற்றி அவள் போலீசில் புகார் கொடுக்க போகிறாள் என எனக்கு தெரிந்தது. நான் என் வீட்டிற்கு சென்று என் மனைவி சுகன்யாவிடம் எதுவும் கூறாமல் என் வீட்டிலிருந்த வெட்டுக்கத்தியை எடுத்து என் இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டேன். நான் வாலாஜா செல்லும் போது என் செல்போனுக்கு அழைப்பு வந்தது.

ராணிப்பேட்டை மகளிர் போலீசில் இருந்து பெண் போலீஸ் பேசுவதாக தகவல் கூறி விசாரணைக்கு வரகூறினார்கள். நான் அவர்களிடம் நாளைக்கு வருவதாக தகவல் கூறினேன். சுகுணா என் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததில் எனக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அவளை தேடிக்கொண்டு ராணிப்பேட்டைக்கு வந்தேன். வரும் வழியில் அவள் தென்படவில்லை. எனவே ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தேன்.

அங்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள பங்க் கடை முன்பு சுகுணாவை பார்த்தேன். அப்போது மாலை 4½ மணி இருக்கும். அவளிடம் சென்று எனது வண்டியில் உட்கார கூறினேன். அதற்கு சுகுணா முடியாது என கூறி தகராறு செய்தாள். நான் பலமுறை கூறியும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது வண்டியில் வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து அங்கேயே சுகுணாவின் கழுத்து மற்றும் பல இடங்களில் வெட்டினேன். சுகுணா அப்படியே ரோட்டில் சாய்ந்து விட்டாள். ரோட்டில் சில பேரை பார்த்த நான் என்னிடமிருந்த வெட்டுக்கத்தியை அங்கேயே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி சித்தூருக்கு சென்றுவிட்டேன்.

சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் இருசக்கர வாகன பார்க்கிங்கில் இரவு 7.40 மணிக்கு மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு, நான் வாங்கிய புதிய துணிகளை அங்கேயே மாற்றினேன். பின்னர் பழைய துணிகளை நான் வைத்திருந்த பையில் வைத்துக்கொண்டு திருப்பதி சென்று விட்டேன். அங்கு மொட்டை அடித்துக் கொண்டு என் வீட்டிற்கு வருவதற்காக 13-ந் தேதி அதிகாலை (நேற்று) சுமார் 3 மணி அளவில் காவேரிப்பாக்கம் பகுதியிலிருந்து பஸ்சில் வந்து வாலாஜா டோல்கேட்டில் இறங்கினேன். அப்போது போலீஸ் ஜீப்பை பார்த்ததும் போலீசிடமிருந்து பிடிபடாமல் இருக்க மறைந்து ஓடிய போது மாட்டிக்கொண்டேன். இவ்வாறு சுரேந்திரன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சுரேந்திரனை ராணிப்பேட்டை போலீசார் வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி தீனதயாளன் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story