பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 112 புதிய வாக்குச்சாவடிகள் - கலெக்டர் அண்ணாதுரை தகவல்


பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 112 புதிய வாக்குச்சாவடிகள் - கலெக்டர் அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 11:29 PM GMT (Updated: 13 July 2018 11:29 PM GMT)

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 112 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் அடங்கிய 2,175 வாக்குச்சாவடிகளும் அலுவலர்களால் நேரடியாக பார்வையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 2-ந் தேதி வெளியிடப்பட்டது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து எழுத்து மூலம் கருத்து, ஆட்சேபனை கேட்கப்பட்டது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிராமப்புறத்தில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும், நகர்புறத்தில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பிரிக்கப்பட உள்ளது. திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் 277 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றுடன் 14 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளன.

கும்பகோணம் சட்டசபை தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றுடன் 20 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளன. 289 வாக்குச்சாவடிகள் உள்ள பாபநாசம் சட்டசபை தொகுதியில் 11 புதிய வாக்குச்சாவடிகளும், 291 வாக்குச்சாவடிகள் உள்ள திருவையாறு சட்டசபை தொகுதியில் 16 புதிய வாக்குச்சாவடிகளும், 276 வாக்குச்சாவடிகள் உள்ள தஞ்சை சட்டசபை தொகுதியில் 10 புதிய வாக்குச்சாவடிகளும், 274 வாக்குச்சாவடிகள் உள்ள ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் 11 புதிய வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட இருக்கிறது.

254 வாக்குச்சாவடிகள் உள்ள பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 17 புதிய வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்புக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் 112 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, 8 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 2,287 வாக்குச்சாவடிகள் அமையப்பெறும் என கலந்தாலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story