வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம், நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம், நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 10:45 PM GMT (Updated: 12 Aug 2018 10:36 PM GMT)

தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மற்றும் நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம்,

தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மற்றும் நகை திருடிய வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம் ஹவுசிங் யூனிட் அருகே உள்ள டாக்டர் நகரை சேர்ந்தவர் செல்லையா (வயது 60). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி லீலாவதி (55). இவர்களது மகன் சதீஷ்குமார். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி செல்லையாவும் மற்றும் அவருடைய மனைவியும் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.

பின்னர் 2 மணிநேரம் கழித்து வந்தபோது அவர்களின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் 1½ பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது இதுகுறித்து செல்லையா தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமையில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் கலைச்செல்வன், மதியழகன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தாராபுரம் அண்ணாநகரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவரை தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு செல்லையா வீட்டில் திருடியது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தேனிமாவட்டம் பெரியகுளம் கான்மெண்ட் வீதியை சேர்ந்த சந்தோஷ் மணி(55) என தெரியவந்தது.

மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story