காய்ந்த மணிலா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


காய்ந்த மணிலா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sep 2018 11:15 PM GMT (Updated: 4 Sep 2018 8:33 PM GMT)

காய்ந்த மணிலா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் அரக்குமார், தாசில்தார் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளிடம் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய அலுவலர்கள் விரைந்து செயல்படுகின்றனர். ஆனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் பெற்று தர முன் வருவதில்லை. கலஸ்தாம்பாடி பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல் 40 அடி அகலம் கொண்ட வேங்கிக்கால் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுப்பாளையத்தில் இருந்து எம்.என்.பாளையம் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மணிலா பயிருக்கு 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். சில பகுதியில் மணிலா பயிர் விளைச்சலின்றி காய்ந்து உள்ளது. காய்ந்த மணிலா பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை பெற்று தர வேண்டும். இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு மூட உத்தரவிட்ட பிறகு, உணவுத்துறை அமைச்சர் தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என்று கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்று தெரிவிக்க வேண்டும். வள்ளிவாகை புதூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து உதவி கலெக்டர் தங்கவேல் பேசுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story