தூக்கில் பிணமாக தொங்கிய பெண் கொலையா? போலீசார் விசாரணை


தூக்கில் பிணமாக தொங்கிய பெண் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Sep 2018 10:00 PM GMT (Updated: 6 Sep 2018 5:08 PM GMT)

விருத்தாசலம் அருகே தூக்கில் பெண் ஒருவர் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே மணலூர் நகராட்சி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள ஒரு கருவேல மரத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்கில் பிணமாக தொங்கிய பெண்ணை உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அந்த பெண் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண் யார்? அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story