தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொன்று தாய் தற்கொலை - போலீசார் விசாரணை


தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொன்று தாய் தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 7 Sep 2018 10:50 PM GMT)

சேலத்தில் தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயோத்தியாபட்டணம்,

சேலம் மாசிநாயக்கன்பட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் விவசாய மின் மோட்டார்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பிரேமா(வயது 25). இவர்களுக்கு அஜய் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு கண்ணன், விவசாயி ஒருவருடைய மின் மோட்டாரை பழுது பார்த்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்து அடிபட்டு இறந்தார்.

இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட பிரேமா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் முருகன் கோவில் தெரு அருகே ஒரு வீட்டில் குடியேறி வசித்து வந்தார். இவர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். இருந்தாலும் கணவர் இறந்த விரக்தியிலேயே அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு பிரேமா தனது குழந்தை அஜயை வீட்டு முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றார். பின்னர் அந்த தொட்டியை மூடி விட்டார். குழந்தையை கொன்ற அவர் வீட்டுக்குள் சென்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரேமா மற்றும் அவருடைய குழந்தையின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேமா மற்றும் குழந்தையின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில் பிரேமா மற்றும் அஜயை சிலர் கொலை செய்துவிட்டதாக பிரேமாவின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story