தேவதானப்பட்டியில் பயங்கரம்: கத்தியால் குத்தி மனைவி கொலை


தேவதானப்பட்டியில் பயங்கரம்: கத்தியால் குத்தி மனைவி கொலை
x
தினத்தந்தி 9 Sep 2018 12:00 AM GMT (Updated: 8 Sep 2018 10:36 PM GMT)

தேவதானப்பட்டியில், மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த தீபா (25) என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா (5), பிரதீபா (3) என்ற பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மணிகண்டனும், தீபாவும் வேலை பார்த்து வந்தனர். இதற்காக குழந்தைகளுடன் இருவரும் அங்கு தங்கியிருந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் தன்னுடன் வேலை செய்த கீதா (36) என்ற பெண்ணுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். சில காலம் தீபா, கீதா மற்றும் குழந்தைகளுடன் மணிகண்டன் வசித்து வந்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், தீபா கோபித்துக்கொண்டு தனது 2 குழந்தைகளுடன் தேவதானப்பட்டிக்கு வந்துவிட்டார். இதையடுத்து தீபாவை மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வர மணிகண்டன் முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை மணிகண்டன் தேவதானப்பட்டிக்கு வந்தார்.

இதையடுத்து தீபாவை திருப்பூருக்கு வருமாறு மணிகண்டன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் தீபா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்துபோன தீபா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தீபா இறந்ததை உறுதிசெய்த மணிகண்டன், அவரை குத்திய கத்தியுடன் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில், தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு பிணமாக கிடந்த தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story