ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1½ கோடி மோசடி; ஆசிரியர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1½ கோடி மோசடி; ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2018 7:11 PM GMT (Updated: 14 Sep 2018 7:11 PM GMT)

ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1½ கோடி மோசடி செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 47). இவர் தாயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சுந்தர் தன்னிடம் படித்த மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பி வெம்பக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (29) மற்றும் அவரது நண்பர்கள் 39 பேர் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆசிரியரின் இந்த மோசடிக்கு சென்னையை சேர்ந்த ஆறுமுகம், அவரது மனைவி இந்திரா, சென்னையில் ரெயில்வேயில் பணியாற்றும் சதீஸ்குமார், ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் மற்றொரு சதீஸ்குமார், பாஸ்கரன் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். ரூ.1 கோடியே 40 லட்சமும் ஆறுமுகம் மற்றும் இந்திராவின் வங்கிக்கணக்கில் தான் போடப்பட்டுள்ளது.

ஆனால் சுந்தர் யாருக்கும் வேலை வாங்கித்தராததோடு ஒரு சிலருக்கு போலி நியமன உத்தரவும் வழங்கியதாக கூறப்படுகிறது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கார்த்தீஸ்வரன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதைதொடர்ந்து சுந்தர், ஆறுமுகம், இந்திரா, சதீஸ்குமார், மற்றொரு சதீஸ்குமார், பாஸ்கரன் ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுந்தர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே ஊழியர் சதீஸ்குமாரும், பாஸ்கரனும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story