நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்


நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
x
தினத்தந்தி 22 Sep 2018 9:15 PM GMT (Updated: 22 Sep 2018 1:49 PM GMT)

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

நெல்லை, 

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு செல்வார்கள்.

இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு திருமபி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்கள்

நேற்று காலை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோனி பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் முதன்மை நிதி அலுவலர் சங்கர், பொது மேலாளர் துரைராஜ் மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் பெருமாள் கோவில், தேவர் பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று வருகிறது. இதற்கு கட்டணணாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. இதே போல் வருகிற 29–ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 6–ந்தேதி, 13–ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

இதேபோல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடிக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாளநல்லூருக்கும் நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story