பொன்னமராவதியில் கால்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு


பொன்னமராவதியில் கால்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 8:59 PM GMT)

பொன்னமராவதியில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை திருச்சி அணியும், 2-வது பரிசை சேலம் அணியும், 3-வது பரிசை காரைக்குடி கண்டனூர் அணியும், 4-வது பரிசை பாலக்குறிச்சி அணியும் பெற்றன.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பொன்னமராவதி பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் ஜெபநேசர் தலைமை தாங்கினார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில கால்பந்தாட்ட வீரர் கணேசன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் சொக்கலிங்கம், வில்லியம், பாலுச்சாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் தொழிலதிபர் ஜெயராமன், முத்து, ஜோசப் ரவிக்குமார், அப்துல்லா, மூக்கையா, பழனியப்பன் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கால்பந்து வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் செய்திருந்தனர்.

Next Story