வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனைத்து பணிகள்-சேவைகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம்: கலெக்டர் தகவல்


வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனைத்து பணிகள்-சேவைகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:30 PM GMT (Updated: 13 Oct 2018 9:58 PM GMT)

வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த 2012-ம் ஆண்டு வாகனங்களுக்கான பதிவுக்கட்டணம் மற்றும் வரியை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக பெயர் மாற்றம் செய்தல் உள்பட வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதிநேர அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி வந்தனர்.

கடந்த 1-ந்தேதி முதல் ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கான கட்டணத்தை முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டே இணையதளத்தின் வாயிலாக செலுத்தும் வசதி தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, மனுதாரர்கள் நேரடியாக https://pa-r-iv-a-h-an.gov.in/sar-at-h-is-e-r-iv-c-e-ov6/sar-at-h-i-h-o-m-e-pu-b-l-ic.do என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பயன் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் மனுவை பூர்த்தி செய்த பிறகு அதற்கான கட்டணத்தை, வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம். அல்லது விண்ணப்பத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று தகுந்த சோதனையில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இதன்மூலம் மனுதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்துவதால் ஏற்படும் கால விரயமும், பொதுமக்கள் அலுவலகங்களில் காத்திருப்பதும் குறைக்கப்படுகிறது. மேலும், அவர்கள் இருப்பிடத்தில் இருந்தே மனு செய்தால் 24 மணிநேரமும் வங்கி வழியாக பணம் செலுத்துவதன் மூலம், பொதுமக்கள் மிகவும் சுலபமாக கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தினால், அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, இதர பணிகளில் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும். போக்குவரத்து துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல் கல் ஆகும். இதேபோன்றே, வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் படிப்படியான ரொக்கமில்லா பரிவர்த்தனை, மற்ற சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story