கடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி மீனவர்கள் போராட்டம்


கடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 7:07 PM GMT)

கடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் தொடுவாய் கிராம மீனவர்கள் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி,

சீர்காழி அருகே தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் முனியாண்டிசெட்டி மகன் கவியரசன் (வயது 28). மீனவர். இவர், கடந்த 10-ந் தேதி அதிகாலை கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் கவியரசன் கடலில் தவறி விழுந்து மூழ்கினார். அப்போது படகில் இருந்த மற்ற மீனவர்களும் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் கடலில் தவறிவிழுந்த மீனவரை தேடினர். ஆனால் கவியரசனை காணவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக கிராமத்தில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்த படகின் மூலம் கடலில் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

ஆனால் கவியரசன் இதுவரை கிடைக்காததால் ஆத்திரமடைந்த தொடுவாய் கிராமமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும் கம்பத்தில் இருந்து இறக்கி, கொடிக்கம்ப மேடைகளில் வெள்ளை துணிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடுவாய் கிராம மீனவர்கள் கூறுகையில், மீன் பிடிக்க சென்ற கவியரசன் கடலில் தவறி விழுந்து மாயமாகி 4 நாட்கள் ஆகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும், கடலோர காவல்துறை, சீர்காழி காவல்துறை, அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் சொந்த செலவில் படகு மூலம் காணாமல்போன கவியரசனை தேடி வருகிறோம். எனவே, வருங்காலங்களில் அரசியல் கட்சியினர் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என கூறி வருகின்றனர்.

Next Story