பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் டிரைவர் படுகொலை 3 பேரிடம் போலீசார் விசாரணை


பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் டிரைவர் படுகொலை 3 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 8:51 PM GMT)

பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈ.காட்டூர் பகுதியில் தண்ணீர் தொட்டி அருகில் நேற்று வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடந்தவர் சங்ககிரியை சேர்ந்த கந்தசாமி மகன் தர்மராஜ் (வயது27) என்பதும், சரக்கு வேன் டிரைவர் என்பதும், அவருடைய உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தர்மராஜின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அப்போது தர்மராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதில் ஒரு பெண்ணுக்கு தொடர்பு உள்ளது என்றும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு வேன் டிரைவர் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story