உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு


உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 8:58 PM GMT)

செடி, கொடிகளை அகற்ற கட்டாயப்படுத்துவதுடன் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறப்பதிலும் பாரபட்சம் காட்டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

தஞ்சாவூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ராயமுண்டான்பட்டி, நவலூர், வெண்டையம்பட்டி, சுரக்குடிபபட்டி, கோட்டரப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்கால் பாசன பகுதியில் பருவமழை பொழியாததாலும், போதிய தண்ணீர் காவிரி ஆற்றில் வராததாலும் கடந்த 5 ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்துவிட்டது. இந்த ஆண்டு காவிரி ஆற்றில் அதிகஅளவு தண்ணீர் வந்து மேட்டூர் அணை நிரம்பியது. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால் திருச்சி மாவட்டம் வாளவந்தான்கோட்டை ஏரி நிரம்பியது.

உங்களது(கலெக்டர்) துரித நடவடிக்கை காரணமாக ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் விவசாய பணிகளை தடையின்றி செய்ய போதிய தண்ணீர் உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்கால் பாசன பகுதிக்கு இன்னும் வந்து சேரவில்லை. இது அதிகாரிகளின் அலட்சிய போக்கையே காட்டுகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிடுவதில் பாரபட்சம் காட்டி வருவதோடு, எங்கள் பகுதிக்கு வரும் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை அகற்றுவதற்கு விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட எல்லைக்குள் வரும் வாய்க்காலை பராமரிக்கவும் தஞ்சை மாவட்ட விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர். இப்படி விவசாயிகளை நிர்பந்தித்து தண்ணீர் தருவதில் இடையூறு ஏற்படுத்துவதை போக்குவதுடன், தற்போதுள்ள அணுகுமுறையை மாற்றி தொடர்ந்து உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனி திறமையாளர்கள் களத்தின் மாநில தலைவர் சிவஞானபிரகாசம் தலைமையில் ஆலோசகர்கள் ரவிச்சந்திரன், கோபுராஜ், பைசால் ஆகியோர் முன்னிலையில் பன்முக கலைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்குவதை போல தனி திறன் கலைஞர்களான பலகுரலில் பேசுபவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மேஜிக் செய்பவர்களுக்கும் வழங்க வேண்டும். கலை பண்பாட்டுத்துறையில் பதிவு செய்த கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். தென்னகப்பண்பாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தனி திறன் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஒப்பனை சாதனங்கள் வாங்க நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story