சம்பளம் வழங்காததை கண்டித்து முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை


சம்பளம் வழங்காததை கண்டித்து முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Oct 2018 11:15 PM GMT (Updated: 31 Oct 2018 9:01 PM GMT)

சம்பளம் வழங்காததை கண்டித்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான் தவிர மற்ற 7 வட்டாரங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மாதத்துக்கான (அக்டோபர்) சம்பளம் வழங்கப்படவில்லை.

மேலும் தீபாவளி முன் பணமும் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், சம்பளம் மற்றும் தீபாவளி முன் பணத்தை உடனடியாக வழங்கக்கோரியும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேற்று ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாவட்ட செயலாளர் ஈவேரா, முன்னாள் மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜூலியஸ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், வட்டார செயலாளர்கள் மணிகண்டன், அய்யப்பன், வேதரத்தினம், பாரதிமோகன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்துவிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குள் ஊதியம் வழங்கப்படாவிட்டால் தீபாவளி பண்டிகை நாளில் முதன்மை கல்வி அலுவலகத்தில் தங்கி போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story