முத்துப்பேட்டையில் சேதமடைந்த சாலையை எம்.எல்.ஏ. பார்வையிட்டார் விரைவில் சீரமைக்க அதிகாரியிடம் வலியுறுத்தல்


முத்துப்பேட்டையில் சேதமடைந்த சாலையை எம்.எல்.ஏ. பார்வையிட்டார் விரைவில் சீரமைக்க அதிகாரியிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 7:22 PM GMT)

முத்துப்பேட்டையில் சேதமடைந்த சாலையை ஆடலரசன்எம்.எல்.ஏ. பார்வையிட்டார். விரைவில் சாலையை சீரமைக்க அதிகாரியிடம் வலியுறுத்தினார்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை பேரூராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் கோசாகுளம் எதிரில் இருந்து அரசு பள்ளியை ஒட்டி உள்ள மண் சாலையை தார்ச்சாலையாகவோ, சிமெண்டு சாலையாகவோ அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் இந்த சாலைசேதமடைந்து முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக் குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆடலரசன் எல்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த ஆடலரசன் எம்.எல்.ஏ., சேறும், சகதியுமாக உள்ள சாலையை நேரில் பார்வையிட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் சேதமடைந்துள்ள இந்த சாலையால் தங்களுக்கு ஏற்படும் அவதி குறித்து எம்.எல்.ஏ.விடம் கூறினர். உடனே அங்கிருந்து முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. இந்த சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஆடலரசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- இந்த சாலை குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைக்க வலியுறுத்தி உள்ளேன். மேலும் உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக், நகர பொறுப்பாளர் நவாஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story