சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி கைது


சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 Nov 2018 10:29 PM GMT (Updated: 11 Nov 2018 10:29 PM GMT)

சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பல்லடம்,

பல்லடம் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த பனியன் நிறுவன தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி மாவட்டம் பெரிய குளம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சவுந்தரபாண்டி (வயது 27). இவர் கடந்த 3 வருடங்களாக பல்லடம் கணபதிபுரத்தில் தங்கி இருந்து அருள்புரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 12.4.2018 அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சவுந்தரபாண்டி அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சவுந்திரபாண்டி தான் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தபோது சவுந்தரபாண்டி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 9.11.2018 அன்று சவுந்தரபாண்டிக்கு அவரது சொந்த ஊரில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் நேற்றுமுன்தினம் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றுகாலை பல்லடம் பஸ் நிலையத்தில் நின்ற சவுந்தரபாண்டியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.



Next Story