கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 8:56 PM GMT (Updated: 21 Nov 2018 8:56 PM GMT)

‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டியில் இருந்து நேற்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம்,

‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அரிசி, பிஸ்கட், பால் பவுடர், போர்வை, துணிகள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை நேற்று காலையில் மினி லாரியில் ஏற்றி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து கொடி அசைத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரியை வழியனுப்பி வைத்தார். வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ராமமூர்த்தி, மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ரமேஷ், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் கந்த சிவசுப்பு, சந்துரு, பிச்சை கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதேபோன்று கோவில்பட்டி பண்ணைத்தோட்டம் பகுதியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி, கோதுமை, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை சேகரித்தனர். பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றி, திருச்சியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிர்வாகிகள் செல்வகுமார், தாமோதர கண்ணன், சிவா, ரமேஷ், சிம்சன், மாதவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



Next Story