போலீஸ்காரர் இறுதிச்சடங்கில் தகராறு: மிதித்ததில் காயம் அடைந்த முதியவர் சாவு - தொழிலாளி மீது கொலை வழக்கு பாய்ந்தது


போலீஸ்காரர் இறுதிச்சடங்கில் தகராறு: மிதித்ததில் காயம் அடைந்த முதியவர் சாவு - தொழிலாளி மீது கொலை வழக்கு பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 9:44 PM GMT)

தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் இறுதிச்சடங்கின்போது ஏற்பட்ட தகராறில் எட்டி மிதித்ததில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தொழிலாளி மீது கொலை வழக்கு பாய்ந்தது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது29). விருதுநகரில் ஆயுதப்படை போலீஸ்காரராக இருந்த இவர் குடும்ப பிரச்சினையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறுதிச்சடங்கு எஸ்.ராமச்சந்திராபுரம் மயானத்தில் நடந்தது.

உடலை எரியூட்டும் பணியில் கிருஷ்ணன்(வயது72) என்பவர் ஈடுபட்டார். அப்போது அவருக்கும் அங்கு இருந்த கூலித்தொழிலாளியான சின்னராஜ் (27) என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

தகராறின்போது ஆத்திரம் அடைந்த சின்னராஜ், கிருஷ்ணனின் வயிற்றில் எட்டி மிதித்துள்ளார். இதில் காயம் அடைந்து நிலை குலைந்து விழுந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணனை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

இதனை தொடர்ந்து சின்னராஜ் மீது கொலை வழக்கு பாய்ந்தது. அவரை கிருஷ்ணன்கோவில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story