விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது


விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 22 Nov 2018 11:30 PM GMT (Updated: 22 Nov 2018 10:49 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம்,

தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பரவலாக சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த காற்றுடனும், இடி-மின்னலுடனும் கூடிய கனமழையாகவும் வெளுத்து வாங்கியது. இந்த மழை நேற்று காலை 9 மணி வரை பெய்து ஓய்ந்தது.

இந்த மழையினால் விழுப்புரம் நகரில் உள்ள நேருஜி சாலை, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, திரு.வி.க. சாலை, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் தாழ்வான பகுதிகளான கம்பன் நகர், ஆசிரியர் நகர், மணிநகர், சுதாகர் நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

மேலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பயணிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரவோடு, இரவாக நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். அதுபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியிருந்ததால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த நகராட்சி ஊழியர்கள் அங்கும் விரைந்து வந்து இரவோடு, இரவாக மின் மோட்டார் மூலம் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.

அதுபோல் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில், தந்திராயன்குப்பம், சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழையாகவும், மற்ற இடங்களான விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையாகவும் விடிய, விடிய பெய்தது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலை முதல் மாலை வரை சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.

பிரம்மதேசம் பகுதிக்குட்பட்ட வண்டிபாளையம், பெருமுக்கல், சிறுவாடி, கயல்மேடு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்த மழையால் மின்மாற்றி, மின்கம்பங்கள் சேதமடைந்தது. இதனால், கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றி இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏரி, குளங்களில் நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், கழிவுநீர் கால்வாய் அடைப்பு காரணமாகவும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் வண்டிப்பாளையம், சிறுவாடி உள்ளிட்ட கிராமங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவாடி மக்கள் நேற்று காலை 8 மணிக்கு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீர் மற்றும் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால் அடைப்புகளை சரி செய்யக்கோரியும், உடனடியாக மின்சாரம் வழங்க கோரியும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

திண்டிவனம் பகுதியில் பெய்த பலத்த மழையினால் திண்டிவனம்-புதுச்சேரி சாலை, நேருவீதி, கர்ணாவூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 20-வது வார்டு பகுதியில் உள்ள வீராங்குளம், வகாப்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்கள் முழுவதும் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அப்பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

அதுபோல் காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர், வீட்டிற்குள் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டிவனம் வடஆலப்பாக்கம் செல்லும் சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. மேலும் இரவு முழுவதும் திண்டிவனம் நகர் பகுதியில் அவ்வப்போது மின்சார தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல் திண்டிவனம்- கர்ணாவூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. மேலும் மயிலம் அடுத்த சென்னை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரத்தில் இருந்து கூட்டேரிப்பட்டு வரை கால்வாய்களில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்படாததால் இணைப்பு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கூட்டேரிப்பட்டு குடியிருப்பு பகுதியிலும் கால்வாய்கள் சரிசெய்யப்படாமல் இருந்ததால் அங்குள்ள மரக்கடைக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் எடைமேடை மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் வெளியேற முடியாமலும், வாகனங்களை வெளியே எடுக்க முடியாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மழையால் மயிலம் தீர்த்தகுளம் நேற்று காலை நிரம்பியது. இதேபோல் திண்டிவனம், வானூர், மரக்காணம், விக்கிரவாண்டி ஆகிய தாலுகாக்களில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன

விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக முண்டியம்பாக்கம் மெயின்ரோட்டில் இருந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் மருத்துவமனைக்கு எளிதில் செல்ல முடியாமல் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் செஞ்சி கூட்டுசாலையில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனே பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை தூர்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்தனர். மேலும் செஞ்சி அருகே கீழ்பாப்பாம்பாடி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் செங்கமலம் என்பவருக்கு சொந்தமான பசுமாடு செத்தது.

வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாலும் நேற்றும் 2-வது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டம் முழுவதும் 1,327.10 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக வானூரில் 112 மி.மீ. பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story