இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்


இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:15 PM GMT (Updated: 1 Dec 2018 10:32 PM GMT)

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகை நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் கப்பலைக் கொண்டு மோதி மூழ்கடித்ததும், அதில் இருந்த 4 மீனவர்களை சிறைபிடித்து சென்றதும் ராமேசுவரம் மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், மூழ்கடிக்கப்பட்ட படகுக்கு இலங்கை அரசு உரிய இழப்பீடு வழங்க கோரியும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் நடந்த அனைத்து மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அந்த கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் மீனவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடல்பகுதியில் அனைத்து விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் துறைமுகப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story