தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 11:15 PM GMT (Updated: 12 Dec 2018 10:10 PM GMT)

ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அர்ச்சுனன்(வயது 41). தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது செல்போனில் வீடியோ ஒன்றினை எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவவிட்டார். அந்த வீடியோ காட்சியில் அர்ச்சுனன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு பயங்கரமான நீண்ட பட்டாகத்தியை காட்டி தரக்குறைவாகபேசி கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. பிரமுகர் ஒருவர் மாவட்ட பொறுப்பாளருக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சி தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க. இலக்கிய அணி அமைப் பாளர் கமுதி சாயக்காரத்தெருவை சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன் பாரதிதாசன் என்பவர் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து பயங்கர ஆயுதத்துடன் தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக அர்ச்சுனனை கைது செய்தார். தி.மு.க. பிரமுகர் ஒருவர் மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story