விளைநிலம் வழியாக மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: வே.கள்ளிப்பாளையத்தில் நாளை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விளைநிலம் வழியாக மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: வே.கள்ளிப்பாளையத்தில் நாளை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:33 PM GMT (Updated: 15 Dec 2018 10:33 PM GMT)

விளைநிலம் வழியாக மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வே.காளிபாளையத்தில் நாளை(திங்கட்கிழமை) விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.

காமநாயக்கன்பாளையம்,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம், தமிழக மின்தொடரமைப்பு கழகத்துடன் இணைந்து மின்கோபுர வழித்தட பாதை அமைக்க உள்ளது. இது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களின் வழியாக மின் கோபுர பாதை கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை(திங்கட்கிழமை) தமிழகத்தில் 8 இடங்களில் விவசாயிகள் காத்திருப்பு தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் -தாராபுரம் சாலையில் உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி காத்திருப்பு போராட்டத்துக்காக தற்காலிக பந்தல், சமையல் கூடம் அமைக்கும் பணிகள் வே.கள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளிடம் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு அவர் கூறியதாவது:-

நாளை நடைபெறும் போராட்டத்துக்கு 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என கருதுகிறோம்.மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் உயர் மின் கோபுரங்கள் பாதை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தால் 2½ லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தற்போது இப்பணியால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் சாலையோரம் கேபிள் வழியாகவும், அதேபோல் மதுரையிலிருந்து இலங்கையின் புது அனுராதாபுரத்திற்கும் கேபிள் வழியாகவும் மின்சாரம் கொண்டு செல்ல திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதே போன்று சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இது போன்ற திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். கேரளாவில் உள்ளதை போல் தமிழகத்திலும் சாலையோரம் கேபிள் மூலம் மின்பாதை அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் வே.கள்ளிப்பாளையம் (திருப்பூர்), சுல்தான்பேட்டை (கோவை), மூலக்கரை (ஈரோடு), படைவீடு (நாமக்கல்),வாழப்பாடி (சேலம்), கிளிப்பட்டு (திருவண்ணாமலை),பென்னாகரம் (தர்மபுரி) வேலூர் உள்ளிட்ட 8 இடங்களில் விவசாயிகள் சார்பில் காத்திருப்பு தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் முத்துவிஸ்வநாதன், திருப்பூர் மாவட்ட தலைவர் நாச்சிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி,பூமலூர் சிவக்குமார்,விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story