திருக்கழுக்குன்றம் அருகே காயங்களுடன் காவலாளி பிணம்; கொலையா? போலீசார் விசாரணை


திருக்கழுக்குன்றம் அருகே காயங்களுடன் காவலாளி பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2019 9:45 PM GMT (Updated: 2 Jan 2019 7:23 PM GMT)

திருக்கழுக்குன்றம் அருகே காயங்களுடன் காவலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 64). இவர் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 31–ந் தேதி வழக்கம் போல மாலை 5 மணிக்கு வேலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் வேலை செய்த பள்ளியின் பின்புறம் தலையில் பலத்த காயங்களுடன் அவரது உடல் கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story