சித்தோடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை: 2,550 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்


சித்தோடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை: 2,550 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 7:06 PM GMT)

சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி 2 ஆயிரத்து 550 கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

பவானி,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15–ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. பொங்கல் வைப்பதில் வெல்லமும் நாட்டுச் சர்க்கரையும் பெரும்பங்கு வகிக்கிறது.

இதனால் நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள வெல்ல மார்க்கெட்டுகளில் வெல்லத்தை ஏலம் எடுத்து விற்பனைக்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகா கொண்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு விற்பனைக்காக சித்தோடு மார்க்கெட்டுக்கு வரும் வெல்லங்களில் கலப்படங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

அதன்பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு பிரிவு மாவட்ட அதிகாரி கலைவாணி தலைமையில் ஈரோடு நகர மற்றும் சித்தோடு பவானி பகுதி அலுவலர்கள் செல்வன், கோவிந்தராஜ், ரவி முத்துகிருஷ்ணன் உள்பட 10–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சித்தோடு வெல்ல மார்க்கெட்டுக்கு சென்று நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் 2 ஆயிரத்து 550 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைக்காக அனுப்ப எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘வெளுப்பு நிற வெல்லத்திற்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் வெல்லத்தை காய்ச்சும்போது உற்பத்தியாளர்கள் அதில் சூப்பர் பாஸ்பேட் மற்றும் சர்க்கரையை பயன்படுத்துவார்கள். அதில் கலப்படம் உள்ளதா என சோதனை நடத்தினோம். இதில் 2,550 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது’ என்றனர்.

மேலும் நேற்று நடந்த ஏலத்தில் அச்சு வெல்லம் 30 கிலோ ரூ.1000 முதல் ரூ.1,150 வரையும், உருண்டை வெல்லம் 30 கிலோ ரூ.1000 முதல் ரூ.1,170 வரையும், நாட்டுச் சர்க்கரை ரூ.950 முதல் ரூ.1,150 வரையும் விற்பனை ஆனது. இந்த ஏலத்தில் சுமார் 240 டன் மதிப்பிலான வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை விற்பனை செய்யப்பட்டது.


Next Story